Sunday, November 14, 2010

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுமுறைகள்

சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது
உடல் நன்றாக இயங்க தேவையான சக்திக்கு உடலில் உள்ள செல்களுக்கு சர்க்கரை(குளுக்கோஸ்) தேவை. நாம் உண்ணும் உணவுதான் செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது.
கணையத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன் ”இன்சுலின்”  தான் செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல அத்தியாவசியமாகும்.  தேவையான இன்சுலின் கணைத்தில் இருந்து சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்த ஓட்டத்தில் அதிகளவு சேர்ந்து விடும் போது ஏற்படும் விளைவு தான் சர்க்கரை நோய் ஆகும்.


சர்க்கரை உடலில் கூடினால் மட்டுமல்ல, குறைந்தாலும் பாதிப்பு ஏற்படும். மரபு ரீதியாகவும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் செரித்து ரத்தத்தில் சேருமாதலால், சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரம் கழித்தே சர்ககரை நோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரண நபருக்கு 110 mg/dl அளவிலிருந்து 140 mg/dl வரை இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது 126 mg/dl விட அதிக அளவிலிருந்து 200 mg/dl விட அதிகளவில் இருக்கும். சர்க்கரை அளவு ரத்தத்தில் 90 mg/dl விட குறைந்தால் அது தாழ்நிலை சர்க்கரை நோயாகும்.


சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்
   கடுமையான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, ஆறாத புண், தொடர்ந்த களைப்பு, அதிகமான பசி, மங்கலான பார்வை, கால் மறத்து போதல், தலை சுற்றி மயக்கம் வருதல்.

சர்க்கரை நோயால் என்ன விளைவுகள் ஏற்படும்
சர்க்கரை நோய் வந்தால் செல்கள், ரத்தம் என இரண்டும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் தனியாக வருவதில்லை. சரியாக கவனிக்க படவில்லை என்றால் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம், பார்வை மங்குதல் அல்லது பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, சிறிய காயம் கூட புண் ஆவது, பாதங்கள் மறத்து போதல் அல்லது புண் ஏற்படுவது, களைப்பு போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயை எவ்வாறு சமாளிப்பது
சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாம். திடீரென்று ஏற்படும் தாழ்நிலை சர்க்கரை நோய்க்கு இனிப்பான பதர்த்தம்(சாக்லெட்) சாப்பிடலாம். பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். உயர்நிலை சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்ட பின்பு மருத்துவமனைக்கு செல்லலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, சரியான நேரத்தில் நல்ல உணவுமுறை பழக்கம், சர்க்கரையின் அளவை தவறாமல் கண்காணித்தல், உடற்பயிற்சி, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், பாதங்களை பராமரித்தல், தேவையான இன்சுலின் எடுத்து கொள்ளுதல் போன்றவைகளை செய்தால் சர்க்கரை நோயை பற்றி கவலைபட தேவையில்லை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற உணவுகளை உண்ணலாம்.

1) பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், கத்திரிக்காய், பீரக்கங்காய், வாழைப்பூ, புதினா, வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, கருவேப்பிலை, அனைத்துக் கீரை வகைகள் போன்ற பச்சை காய்கறிகளை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.


2) பானங்களில் சோடா, நீர்மோர், பால்குறைவான சர்க்கரை போடாத காபி, டீ, சூப், சர்க்கரை போடாத தக்காளி மற்றும எலுமிச்சை பழ ஜுஸ்.

3) பழங்களில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: வாழைப்பழம் (சிறியது)-1, வாழைப்பழம்(பெரியது) அல்லது மலைவாழை - பாதி, ஆரஞ்ச் - 2, ஆப்பிள் - 2, கொய்யா (சிறியது)-2, தர்பூசணி அல்லது கிர்ணிப்பழம் - 200 கிராம், பப்பாளி - 150 கிராம், பேரிக்காய் (சிறியது) - 2, அன்னாசிப்பழம் - கால்பாகம், சாத்துக்குடி - 1, திராட்சை - 25, தக்காளி - 6.

4) எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீபைண்ட் எண்ணெய்

5) அசைவ உணவுகளில் ஒருநாளில் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடலாம்: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும், மீன் - 2 துண்டுகள், கோழிக்கறி - 100 கிராம், ஆட்டுக்கறி - 100 கிராம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

 வாழைக்காய், அனைத்து கிழங்கு வகைகள், இனிப்பு பதார்த்தம், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, தேன், குளுக்கோஸ், கருப்பட்டி, கேக், சாக்லெட், ஐஸ்க்ரீம், ஜாம், இனிப்பு நிறைந்த பிஸ்கெட், பால்கோவா,  ஜெல்லி, பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்விட்டா, பாட்டில்களில் வைத்து விற்கப்படும் அனைத்து பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள், வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில், எண்ணெய் அதிகளவில் சேர்க்கப்பட்ட ஊறுகாய், வறுத்த மற்றும் பொரித்த உணவு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா, மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.



மது, சிகரெட், புகையிலை, பொடி போடுதல் ஆகியவற்றையும் நிறுத்த வேண்டும். உடற்பயிற்சியும், 20 நிமிட நடைபயிற்சியும் செய்யலாம். ஆனால் காலி வயிற்றிலோ, உணவு உண்டவுடனேவோ உடற்பயிற்சி செய்யக் கூடாது.




No comments:

Post a Comment